தேவகோட்டை அடுத்த ரஸ்தா ரெயில் நிலையம் அருகே உள்ள காட்டு பகுதியில் நேற்று மாலை தேவகோட்டை வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு உள்ள ஒரு முந்திரி தோட்டத்தின் நடுவே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் 12 இடங்களில் கத்திக்குத்து இருந்தது.
இறந்து கிடந்த வாலிபர் வெள்ளை சட்டையும், நீலநிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்து உள்ளார். இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கல்லல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட வாலிபர் பெயர் விவரம், கொலைக்கான காரணம் என்ன? கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.